சுந்தரானந்தர் சித்தர்

சுந்தரானந்தர் சித்தர் வரலாறு

நகரங்களில் சிறந்தது காஞ்சி மாநகர் என்பார்கள். அதனினும் சிறந்தது மதுரையம்பதி என்றால், துளியும் மிகைகிடையாது. அதிலும் அபிஷேக பாண்டியனின் காலத்தில் மதுரை நகரம் வடிவிலும் சரி, பொலிவிலும் சரி பூரித்துக் கிடந்தது.

சிறப்பு பெற்ற மதுரை மாநகரின் வீதிகளில் அறிஞர் சங்கங்கள் நிரம்பியிருந்தன.

குதிரை வீரர்களின் உலாக்களுக்கும், சிவிகைகளின் ஊடு நடைக்கும் நடுவே யாராவது இரண்டுபேர் சந்தித்துக் கொண்டால், அவர்கள் பேசிக்கொள்வது கவிதையாகத்தான் இருக்கும். அதில் குற்றம் காண்பதும் பின் அரண்மனை முற்றம் ஏகுவதும் சாதாரணமாக நடக்கும். தமிழ், திருநடனமாடிய நாட்கள் அவை.

ஆயினும் மனித சக்தியின் புதுப்புது பரிமாணங்கள் பற்றி பெரிய ஞானம் யாருக்கும் இல்லை என்றே கூறவேண்டும்.

சோமசுந்தரர் ஆலயம் ஏகுபவர்கள் கூட, இறைவனை ஒரு நிகரில்லாத சக்தியாகக் கருதி பொன் கேட்டார்கள், பொருள் கேட்டார்கள். ஒருவர்கூட நிகரில்லாத ஞானத்தைக் கேட்கவில்லை… கேட்கத் தெரியவில்லை.

இவர்களுக்கெல்லாம் வழிகாட்டுவதற்கென்றே இறைவனும் சோமசுந்தரனாய் ஒரு கட்டிளம் காளை வடிவில் மதுரையம்பதிக்குள் ஒருநாள் நுழைந்தான்.

அவன் திருக்கோலத்தை மதுரைக் கலம்பகம் தொட்டு பரஞ்சோதியடிகளின் கண் வழிக்காண்போமா?

‘விபூதிப் பந்தலிட்ட நெற்றி, மையத்தில் குங்குமத் திலகம். உச்சியில் வட்டமிட்டு வளைத்துக் கட்டிய சிகை, செவிப்புலத்திலோ கனக குண்டலங்கள், கழுத்தில் ஸ்படிக மாலை, அதன் மையத்தில் ஓர் உருத்திராட்சம். பரந்துவிரிந்த மார்பு, அதில் பளீரென்ற பூணூல்.

சிவபெருமானே நேரில் வந்து விட்டிருக்கிறான் என்பதன் சான்றாய் புலித்தோல் ஆடை, பொற்சிலம்பு, பாதங்களில் நாகமரக்குறடுகள்…. நடந்து வரும் விதத்திலோ சொல்லமுடியாத அளவு நளினசிங்காரம்! மதுரை மாநகரமே அவர் மேல் வைத்த பார்வையை எடுக்க முடியாமல் திணறியது.

தேஜஸ் என்னும் சொல்லுக்கு பொருள் கூறுவது போல உலவிய அச்சுந்தரனைப் பார்த்த பலரில் சிலர், தம்மை மறந்து கைகளைக் கூப்பி வணங்கவும் செய்தனர்.

பதிலுக்கு அவர்களை சுந்தரர் ஆசிர்வதிக்க, கூப்பிய அவர்களின் கரங்களுக்குள்ளே ஒரு பொன் நாணயம்! கையை அவர்கள் விலக்கியபோது அந்த நாணயம் கீழே விழுந்து உருண்டு ஓடியது.

உருண்டு ஓடியது நாணயம் மட்டுமல்ல…

சுந்தரர் பற்றிய செய்தியும்தான்…

பெருநோய் பிடித்து வாடிய பெரும்புலவர் ஒருவர், அந்த சுந்தரனின் பார்வை பட்டு பரிசுத்தமடைந்து மகிழ்ந்தார், நோய்நீங்கி.

நகர் முழுக்க அவரைப் பற்றியே பேச்சாயிருந்தது.

‘‘ஊர் முழுக்க ஒரு சுந்தர புருஷன் பற்றி பேச்சாக இருக்கிறதே… நீ அவரைப் பார்த்தாயோ?’’

‘‘நீ தவறாகச் சொல்கிறாய். அவர் பார்ப்பதற்கு உரியவர் அல்லர்… தரிசிக்க வேண்டியவர். அவர், மகான்களையும் முனிவர்களையும்விட மகிமைமிக்கவர்!’’

‘‘இவர் அப்படி என்ன செய்தார்?’’

‘‘அப்படிக் கேள். கன்னம் கரிய நிறமுடன் பார்க்கவும் கோரமான தோற்றமாக இருந்த ஒரு பெண்ணை, ஒரு சிட்டிகை விபூதி பூசி பொன்னிறத்தவளாக, மலர்ந்த ஒரு மலர் போல மாற்றிவிட்டாரே… இதை என்னென்று சொல்வது?’’

‘‘நீ சொல்வதைப் பார்த்தால் இவரால் செய்ய முடியாததே எதுவும் இல்லை போல் தெரிகிறதே?..’’

‘‘அதுதான் சத்யமான உண்மை.’’

எங்கும் இப்படிப்பட்ட உரையாடல்கள் நிகழ்ந்தன. அறிஞர் சங்கமோ குழம்பிப் போயிருந்தது. தொண்ணூறு வயதை நெருங்கி விட்ட பெரும்புலவர் வாக்கோடனார் என்பவர். கல்மண்டபம் ஒன்றில் வீற்றிருந்த அவரைச் சுற்றி, பெரிய புலவர் கூட்டமும் சிந்தனையாளர் கூட்டமும் திரண்டிருந்தது.

‘‘வாக்கோடனாரே… இப்படியே அந்த சுந்தரபுருஷனைப் பற்றி குழம்புவதை விடவும் அவருடன் நேருக்கு நேர் பேசிப் பார்த்து விடுவதே எனக்கு உத்தமமாகப் படுகிறது’’ என்று அந்தக் கூட்டத்தில் ஒருவர் கூறிய மறுநொடியே அங்கே பிரசன்னமாகிறது அந்த சுந்தரபுருஷனின் உருவம்.

‘‘அனைவருக்கும் என் ஆசிகள்… சதா என் நினைவாகவே நீங்களெல்லோரும் இருக்கிறீர்கள் என்பது உங்களைப் பார்க்கையில் புலனாகிறது.

உங்கள் எண்ணத்தின் சக்தி என்னை இங்கே இழுத்து வந்துவிட்டது. உங்களில் யாருக்கு என்ன ஐயப்பாடு…? எதுவாயினும் வினவுங்கள். பதில் தருகிறேன்.’’

அங்கே பலருக்கு கேள்வி கேட்பது என்றால் கொள்ளைப் பிரியம். அதிலும் எகணைக்கு மொகணை கேள்வி கேட்பதில் அங்கே சிலர் மிகப்பிரசித்தம். அவர்களெல்லாம் தொடை தட்டிக் கொண்டு தயாராகி விட்டனர்.

‘‘உங்கள் பெயர்?’’

‘‘என் உருவத்துக்கு ஏற்ற பெயர்தான்… சுந்தரன். எப்பொழுதும் ஆனந்தமாகவும் இருப்பவன் என்பதால் சுந்தரானந்தனாகி விட்டேன்..’’

‘‘உங்கள் ஊர்?’’

‘‘இந்த உலகமே எனக்கு ஒரு ஊர்தான்.’’

‘‘அதுசரி… அதில் நீங்கள் ஜென்மம் கண்டது எங்கே என்பதுதான் கேள்வி…’’

‘‘எனது ஊரைச் சொன்னால், அது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் அல்லவா?’’

‘‘முதலில் ஊரைக் கூறுங்கள். பிறகு தெரிந்திருக்கிறதா இல்லையா என்று நாங்கள் கூறுகிறோம்.’’

‘‘நான் கூறிய பிறகு, அப்படி ஓர் ஊரை கேள்வியேபட்டதில்லை என்று கூறிவிடக் கூடாது.’’

‘‘கேள்விப்பட்டிருக்கவில்லை என்றால் அப்படித்தானே கூற முடியும்?’’

‘‘இது ஒருவகையில் சரியான பதில்தான். அதேசமயம், அறியாதவைகளே இம் மண்ணுலகில் அதிகம் என்பதுதான் உண்மை. இதை அறிந்தவர்கள் கேள்வி கேட்கமாட்டார்கள்… மௌனமாகப் புரிந்து கொள்ளவே முயல்வார்கள்.’’

‘‘அது, விஷயத்தைப் பொறுத்தது. உம் வரையில் மௌனமாக இருந்து எதைப் புரிந்து கொள்ளமுடியும்?’’

‘‘மௌனத்தில் விளங்காததா கேள்விகளால் விளங்கி விடப்போகிறது?

ஓர் அளவு வரை, விடைகளை மௌனமாக பரிசீலியுங்கள். அப்பொழுதுதான் சித்தம் விளங்கும்.’’

‘‘சித்தமா…! சித்தம் என்று தாங்கள் எதைக் கூறுகிறீர்கள்?’’

‘‘சித்தம் என்பது ஒரு புதிய சொல்லா என்ன?’’

‘‘சித் என்றால் அறிவு… சித்தம் என்பது அறிவு நிலை. அதை குறிப்பிடுகிறீர்களோ?..’’

‘‘நெருங்கி வந்து விட்டீர்கள். ‘சித்’ என்றால், அறிவது. ‘சித்தம்’ என்றாலோ அறிந்தது, அறிந்து கொண்டிருப்பது, அறிய வேண்டியது என்ற மூன்று தளங்களிலும் இருப்பது. என்னுள் அது இருப்பதால், நானொரு சித்தன் என்றால் அது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகின்றேன்.’’

சுந்தரானந்தரின் பதிலைத் தொடர்ந்து, முதல்முறையாக அந்த அறிஞர் கூட்டமே ஆழ்ந்த மௌனம் கொள்கிறது. உள்ளுக்குள்ளோ அவர் கூறியது போல பரிசீலனை.

முதல்முறையாக ‘சித்தன்’ என்கிற காரணப் பெயரைக் கேட்ட ஆச்சரிய அதிர்ச்சியும் அவர்களிடம் பரவி நிற்கிறது.

‘‘இப்படி மௌனமாக இருப்பதில் இருந்து, ஒரு மாயாவியாகக் கருதிய என்னை, சித்தனாக ஏற்பது எப்படி என்று நீங்களெல்லோரும் யோசிப்பது புரிகிறது…’’

‘‘உண்மைதான்… முனிவனை அறிவோம், புலவனை அறிவோம்.. தபசிகள், மகான்கள், ரிஷிகள் என்று பல பதங்களில் மனித அறிவின் விலாசங்களை அறிவோம். ‘சித்தன்’ என்று ஒன்றை அறிவது இதுவே முதல்முறை.

புதிய சொல்… புதிய பொருள்’’

‘‘எதுவும் இந்த உலகில் புதியதில்லை அறிஞர்களே! இல்லாத ஒன்றை எந்த நாளிலும் நீங்கள் கண்டறிய முடியாது. இருக்கின்ற ஒன்றை முதன்முதலில் அறியும்போது அது புதியதாக சித்தத்துக்கு தோன்றும். பின் அது பழையதாகிவிடும்…’’

‘உண்மைதான்… நீங்கள் புரியும் மாயசாகசங்கள் கூட அப்படித்தானோ?’’

‘‘எது மாய சாகஸம்…? முதலில் அதைக் கூறுங்கள்.’’

‘‘நீங்கள் கைதட்டி அழைத்தால் ஜடப்பொருளான மேகம் கூட உங்களை நோக்கி நீந்தி வருகிறதே… இது மாயமில்லாமல் வேறு என்ன?’’

‘‘எந்த விஷயத்தையும் ஒரே கோணத்தில் நீங்கள் பார்க்கிறீர்கள் என்பது புரிகிறது. மேகம் என் அருகே வரவில்லை. அது வரவும் வராது. நானும் நாமும்தான் அதன் அருகே சென்றோம்…’’

‘‘ஆச்சரியமான பதில் இது… எப்படி என்று கூறமுடியுமா?’’

‘‘சிந்தியுங்கள்… சிந்திக்கத்தானே சித்தம் உள்ளது. சிந்திக்க சிந்திக்க எல்லாம் விளங்கும்?’’

‘‘அதுசரி… பெருநோய் பிடித்த ஒருவர், பரிபூரண குணம் பெற்றாரே அது எப்படி?’’

‘‘பஞ்ச பூதங்களால் ஆனதுதானே இந்த உடல்? பஞ்சபூதச்சிதைவுதான் பெருநோய். அந்த சிதைவை சரிசெய்தேன். அவர் மேனியும் சீராகிவிட்டது? அவ்வளவுதான்..

முதலில் உங்களை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள். அப்பொழுது என்னையும் உணர்ந்து கொள்வீர்கள். அந்த நொடி, இது தெரியாமல் இவ்வளவு நாட்கள் இருந்துவிட்டோமே… என்று ஒரு வருத்தம் உங்களுக்குள் ஏற்படும். அது சிரிப்பாக வெளிப்படும்.

மனித சக்திக்கு ஓர் எல்லை உண்டு என்கிற உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். உங்களுக்குள் உங்களைத் தோண்டுங்கள். அப்படியே காலத்தால் வாழ்வதை உத்தேசித்து கால நேரச் சிந்தனைகளையும் பட்டை தீட்டுங்கள்.

உங்களுக்கு சில விஷயங்களை மட்டும் உரைப்பேன். உங்கள் வாழ்நாட்கள் இத்தனை வருடங்கள், இத்தனை நாட்கள் என்பதில் இல்லை. எவ்வளவு மூச்சு என்பதில்தான் உள்ளது.

சொல்லப் போனால் மூச்சுக்காற்றில்தான் எல்லாமே உள்ளது.’’

‘‘மூச்சுக்காற்றிலா…?’’

‘‘ஆம்… முதலில் மூச்சு… பின் பேச்சு. அதாவது உள் பேச்சு…’’

‘‘உள்பேச்சா… அதாவது மனதிற்குள் பேசிக் கொள்வதா?’’

‘‘அப்படியும் கூறலாம். மனதிற்குள் பேசிக் கொள்ளும்போதுதான் மனதின் திறம் தெரியவரும். மனத்திறத்தில் இருக்கிறது மற்ற விஷயங்கள். அதாவது மந்திரத்தில் என்றும் கூறலாம்…’’

‘‘மந்திரத்திலா…?’’

‘‘ஆம்…’’

‘‘மூச்சு… மந்திரம்.. எல்லாம் என்ன? ஒன்றும் புரியவில்லை எங்களுக்கு…’’

‘‘விதைகளைத் தூவி விட்டேன்.. நான் கூறியதை வைத்துக்கொண்டு அலசுங்கள். ஆராயுங்கள்… மெல்லமெல்ல விளங்கும்.’’

அந்த அறிஞர் சபையின் வாக்குவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் அப்படியே மாமன்னன் அபிஷேக பாண்டியனின் செவிகளுக்கும் போய்ச் சேர்ந்தன.

‘‘மாமன்னா…. ஒரு தனிமனிதனின் சாகஸம் இன்று மதுரையம்பதியையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கடவுளால் கூட காப்பாற்ற முடியாது என்ற விஷயத்தில் எல்லாம் தலையிட்டு, அற்புதங்கள் நிகழ்த்தியுள்ளார் அந்த சித்த புருஷர்…’’

‘‘சித்த புருஷரா…?’’

‘‘ஆம்… அவர் தன்னை அப்படித்தான் கூறிக்கொண்டார்… எனக்கென்னவோ அமுதம் உண்டு சாகாவரம் பெற்ற தேவர்களில் எவரோ ஒருவர்தான் மாயவித்தை காட்டுகிறார் என்று தோன்றுகிறது.’’

‘‘ஆனால், அப்படியெல்லாம் இல்லையாம். மூச்சுக்காற்றில் இருக்கிறதாம் எல்லாம்.. உங்களாலும் முடியும், முயலுங்கள் என்றுதான் கூறியுள்ளார்..’’

‘‘நாமெல்லாம் அற்ப மானிடர்கள். நம்மால் என்ன செய்ய முடியும்? நமது வயிறே முதலில் நமக்குக் கட்டுப்படாத ஒன்றுதானே… நம்மால் என்ன முடியும்? எதுவும் முடியாது.’’

‘‘உங்கள் கருத்துக்கு நேர் எதிராக இருக்கிறது அவர் செயல்பாடு… இயற்கையே அவர் சொன்னபடி கேட்கிறது… எப்படி என்றுதான் தெரியவில்லை.’’

‘‘எப்படி என்று தெரியவில்லையா? அழைத்து வாருங்கள் அவரை. இது அரசன் என்னுடைய ஆணை. என்னிடம் அந்த சித்த புருஷன் தன் சாகஸ ரகசியங்களை கூறிய தீரவேண்டும்… உம்…!’’

அபிஷேக பாண்டியன் கட்டளை பிறப்பிக்க, அதைச் சுமந்து கொண்டு ஓடினர் சில சேவகர்கள்.

பாவம் அவர்கள்

மண்ணாதி பூதங்கள் ஐந்தையும் கண்டேனே

மாயா விகாரங்கள் யாவையும் விண்டேனே

விண்ணொளி மொழியை மெய்யினுள் கொண்டேனே,

மேதினி வாழ்வினை மேலாக வேண்டேனே…’

_ இடைக்காடர்

அபிஷேக பாண்டியன், அரசனுக்கே உரிய செருக்கோடு, சுந்தரானந்தரை அவைக்கு அழைத்து வரச்சொல்லி சேவகர்களை அனுப்பிவிட்டான். ஆனால், அது எத்தனை பிழையான செயல் என்பதை அவன் எண்ணிப்பார்க்கவில்லை.

செருக்குகள் இருவிதம்.

ஒன்று பிறர் அறியும் விதம் வெளிப்படும் கர்வச் செருக்கு. இன்னொன்று, அறியாவண்ணம் ஒளிந்திருக்கும் அதிகாரச் செருக்கு. இரண்டுமே தவறானது என்பதை காலத்தால் உணர்த்துபவர்களே சித்தர்கள். பாண்டிய மன்னனிடம் அதிகாரச் செருக்கிருந்தது. கூடவே அவனுக்கும் மேலானவர்கள் பூமியில் இல்லை என்கிற ஓர் எண்ணமும் இருந்ததால் அவன் பணிவாக நடந்திட வழியே இல்லாமல் போய்விட்டது.

ஆலயத்தின் மிசை தெய்வத்தின் முன் பணிவாக நடந்து கொண்ட போதிலும் அங்குள்ளது விக்கிரக சொரூபம் தானே?

எனவே, உயிருள்ள எவர்முன்னும் அவன் பணிவாக நடந்து கொள்ள வாய்ப்பேயில்லாததால் அவனுக்குள் ஒரு ‘நான்’ அகங்காரத்தோடு எப்பொழுதும் திகழ்ந்தபடி இருந்தது.

அதற்கு அந்த சித்த புருஷரும் ஒரு பாடம் கற்பிக்கத் தயாரானார். தன் எதிர்வந்து நின்ற சேவகர்களை, என்ன சேதி என்பது போல பார்த்தார்.

‘‘உங்களை எங்கள் அரசர்பிரான் காண வேண்டுமாம்.’’

‘‘அதற்கு..?’’

‘‘நீங்கள் எங்களோடு அவைக்கு வர வேண்டும்.’’

‘‘இது என்ன வேடிக்கை? ஆற்றில் குளிக்க ஒருவர் ஆசைப்பட்டால் அவரல்லவா ஆற்றுக்குச் செல்லவேண்டும். ஆற்றை வெட்டி அரண்மனைக்கு இட்டுச் செல்வீர்களோ நீங்கள்?’’

‘‘அது… அது… அதெல்லாம் எதற்கு? அவர் அரசர். இந்த நாட்டின் தலைமகன்.. இது அவர் உத்தரவு.’’

‘‘அந்த உத்தரவுக்கு, தன்னையறியாத நீங்கள் வேண்டுமானால் மடங்கிப் போங்கள். எனக்கு உம் அரசரைக் காண்பதால் ஆகப்போவது எதுவுமில்லை.

‘நான்’ என்கிற மமதை உள்ளோரால் ஆகிவிடப் போவதும் எதுவுமில்லை. அற்ப மனிதப் பிறப்பாக பிறந்து விட்டோமே என்னும் குழப்பம் மிக்க உனது அரசனால் ஆனதும் எதுவுமில்லை. மூன்று காலங்களிலும் இருந்தும் இல்லாத அவனை நான் காண்பது என்பது சித்தத்துக்கும் அழகில்லை. போய்ச் சொல் போ…’’

‘‘மாயாவியே… நீ சொன்னதை நான் அப்படியே போய் சொன்னால் உம்கதி என்னாகும் தெரியுமா?’’

‘‘என் கதி மட்டுமல்ல.. உன் அரசர் கதியும் இப்படி நான் சொன்னால்தான் வரலாறாகும்! போய்ச் சொல். மேற்கொண்டு நீ ஏதாவது பேசினால், சதாசர்வ காலமும் பேசியபடி இருக்கும் கிளியாக உன்னை மாற்றி விடுவேன். அரசனுக்குக் கட்டுப்பட்டு நடக்கத் தெரிந்த உனக்கு, ஆண்டியும் பெரியவனென்று தெரிய வேண்டும். ஓடிவிடு…’’

சுந்தரானந்தர் போட்ட போடு அந்த சேவகர்கள் திரும்பிச் சென்றனர். மன்னன் அபிஷேக பாண்டியனும் அவர்கள் திரும்பி வந்து சொன்னதை எல்லாம் கேட்டு முதலில் அதிர்ந்தான். பிறகு வியந்தான். வார்த்தைக்கு வார்த்தை அவர் சொன்னதையெல்லாம் அசை போடத் தொடங்கினான். ‘ஆனது எதுவுமில்லை, ஆகிவிடப் போவதுமில்லை, ஆவதும் ஏதுமில்லை’ _ என்று முக்கால கதியில் சுந்தரானந்தர் செய்த விமர்சனம் நெஞ்சக் கூட்டை திருகியபடியே இருந்தது. இதனாலோ என்னவோ அவரை எதிர்த்து ஆணைபிறப்பித்து எதையும் செய்யவே தோன்றவில்லை.

ஒரு மனிதன் முதல்முறையாக அபிஷேக பாண்டியன் மனதுக்குள் விசுவரூபமெடுக்கத் தொடங்கிவிட்டான். நின்றால், நடந்தால், படுத்தால், புரண்டால் சுந்தரானந்தர் நினைப்புதான்.

இதே குழப்பத்தோடு ஒரு நாள், ஜடம்போல ஆலவாய் அழகன் திருக்கோயிலுக்குள் மன்னன் சென்ற சமயம், சுந்தரானந்தரும் ஆலயத்துக்குள் பிரவேசித்திருந்தார்.

சாதாரணமாக எல்லா ஆலயங்களையும் கற்பீடங்களே தாங்கி நிற்கும். ஆனால், ஆலவாய் அண்ணலான சொக்கநாதரின் ஆலயத்தை நாற்புறமும் யானைகள் தாங்கி நிற்கக் காணலாம். அதுவும் வெண்ணிற யானைகள்! வெண்ணிற யானை என்றாலே இந்திரன் வந்துவிடுவான்.

இந்திரன் அனுதினமும் பூஜிக்க, சிவ நெறியை நாட்டில் நிலைப்படுத்த, சாப விமோசனமாக கட்டிய திருக்கோயிலல்லவா அது? அபிஷேக பாண்டியனும் அவன் வழி வந்தவனல்லவா? அண்ணலின் தரிசனம் முடிந்து பிரதட்சணம் வரும் சமயம், சுந்தரானந்தரும் எதிரில் வந்தார். அதுவும் அப்பிரதட்சணமாய்….! அப்பொழுதுதானே இருவரும் ஒருவரோடொருவர் மோதிக் கொள்ளவும் தோது ஏற்படும்? அதிலும் அரசன் பிரதட்சண உலா வரும்போது கட்டியங்காரர்கள் முன்னாலே சென்று பராக் சொல்லி எல்லோரையும் ஓரம் கட்டிவிடுவார்கள். ஆயினும் அப்பிரதட்சணமாக வரும் சுந்தரானந்தரை ஓரம்போகச் சொல்ல அவர்களால் முடியவில்லை. காரணம், அவரது தேஜஸ். அடுத்து, பார்க்கும் பார்வை அப்படியே ஆளை நடுக்கி விடுகிறதே..!

அபிஷேக பாண்டியனுக்கு, தனக்கெதிரில் தனக்கிணையாக அவர் நடந்து வருவதன் பொருட்டு கோபம் பீறிட்டது.

அதிகார கோபமும் தவஞான கோபமும் முட்டிக் கொண்டன.

‘‘நீர்தான் மாயங்கள் நிகழ்த்தும் அந்த மாயாவியோ?’’ அபிஷேக பாண்டியனே கேள்வியைத் தொடங்கினான்.

‘‘தவறு பாண்டியனே.. சித்தசாகஸங்கள் மாயங்கள் அல்ல. மாயங்கள் அற்பமானவை. சித்த சாகஸங்கள் ஜம்புலனைச் சுருக்கி உள்ளளியைப் பெருக்கி பஞ்சபூதங்களை உணர்ந்து பிரபஞ்ச நியதி அறிந்து அதற்கேற்ப செயல்படுத்தப்படுபவை… முயன்றால் நீயும் இதை சாதிக்கலாம். இதோ நிற்கிறதே உன் ஏவலர் வரிசை… இவர்கள் கூட சாதிக்கலாம்.’’

‘‘நம்ப முடியாது இதை… அந்த இறைவன், மனிதனை ஒரு வரம்புக்கு உட்பட்டே படைத்திருக்கிறான்…’’

‘உண்மைதான். ஆனால் அந்த வரம்பு, கைலாயம் என்னும் எல்லையை ஒருபுறமும், வைகுந்தம் என்னும் எல்லையை மறுபுறமும் தொட்டு நிற்பது. அதை உணர்ந்து கைலாயத்தை நீ தொடும்போது, நீயே கைலாயபதி.’’

‘‘எதை வைத்து இதை நான் நம்புவேன்?’’

‘‘வேண்டுமானால், இங்கேயே அதற்கான பரிட்சையை வை. மாயம் என்றால் இல்லாததை இருப்பதுபோல உருவாக்குவது. அது வெறும் காட்சி. அவ்வாறு இல்லாத ஒரு சாகஸத்துக்கு நீயே அடி கோலுவாய். நானும் உனக்குப் புரியவைப்பேன்…’’ _சுந்தரானந்தர் அவ்வாறு சொன்னதுதான் தாமதம், அபிஷேக பாண்டியன் தீர்க்கமாய் சிந்தித்தான். அவன் நின்ற இடத்திற்கு அருகில்தான் இருந்தது, ஆலய விமானத்தை தாங்கியபடி இருக்கும் அந்தக் கல் யானை. நிதர்சனமாய் தெரிவது… மாயபிம்பம் அல்ல அது!

‘‘தவசீலரே… இதோ கல் யானை. மானுட சக்தி, இறை சக்தி வரை செல்லக் கூடியது. அதுவே இறையாகவும் உள்ளது என்று கூறினீரே, இந்தக் கல் யானையை உயிர் யானையாக்குங்கள் பார்ப்போம்…. அப்பொழுது நான் நம்புகிறேன்.’’

அபிஷேக பாண்டியன் அப்படிச் சொன்ன நொடி, சுந்தரானந்த சிவத்தின் முகத்தில் ஒரு புன்னகை. பாண்டியன் பரிவாரத்தில் ஒருவன், மன்மதன் போல கரும்போடு தென்பட்டான். அவனும் அருகில் வந்தான். கரும்பும் பாண்டிய அரசன் கைமிசை சென்று சேர்ந்தது.

‘‘பாண்டியனே.. அந்தக் கல் யானை அருகே செல். உன் மனது அந்த ஈசனின் பஞ்சாட்சர மந்திரத்தைக் கூற, மனமுருகி பிரார்த்தனை செய். என் பொருட்டு இன்று கல் யானை உயிர் யானையாகும். நாளை முற்றாய் நீ உன்னையுமறியும்போது உன்னாலுமாகும்..’’ _ என்ற சுந்தரானந்தர் அக்கல்யானையை நோக்க, அடுத்த நொடி, அந்த யானைக்கு உயிர் வந்தது. அதன் தும்பிக்கை அசைந்து நீண்டு பாண்டியன் வசம் இருந்த கரும்பைப் பற்றி உண்ணவும் தொடங்கியது. அபிஷேக பாண்டியன் தன் கண்களையே நம்பாமல் கசக்கி விட்டுக் கொள்ள, முழுக்கரும்பை சாறொழுகத் தின்ற அந்த யானை, பாண்டியன் கழுத்து முத்துமாலையையும் எட்டிப் பறித்தது.

பாண்டியன் ஆடிப்போனான். அவன் மேல் மனதும் ஆழ்மனதும் ஒருசேர ஒரே கதியில் உழப்பட்டதில் அப்படியே சுந்தரானந்தர் பாத கதி விழுந்தான் கண்ணீர் விட்டான். பரவசத்தில் சிலிர்த்தான். சுந்தரானந்தரும் புன்னகை பூத்தார். சூழ்ந்திருப்பவர்களும் காணக்கிடைக்காத காட்சியைக் கண்டதில் பரவச உச்சிகளில் இருந்தனர். அதன்பின், தனக்கு வம்சம் விளங்கப் பிள்ளைப்பேறு வேண்டினான் பாண்டியன். அருளினார் இறைமுனி. யானையும் பறித்த முத்து மாலையை திரும்பக் கழுத்தில் சூட்டி மீண்டும் கல்லாகி நின்றது.

தவசக்தி எத்தகையது என்று நிரூபித்துவிட்ட பூரிப்புடன் அனைவர் கண் எதிரில், ஆலவாயன் திருச்சன்னதிக்குள் புகுந்து மறைந்தார் சுந்தரானந்தர்.

பாண்டியன் நெக்குருகிப் போனான். வேதங்கள் தந்ததும் இறையே.. அதை அசுரர்கள் பாதாளம் கொண்டு சென்றபோது மீட்டு எடுத்து வந்து தந்ததும் இறையே.. வாழவழி காட்டிய இறை, அதனுள் இறையாகவும் ஆகும் வழி காட்டிட, சித்தவுருவினனாகவும் நேரில் வந்தது. அன்று நேரில் வந்த அந்த சிவம், இன்றும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சுந்தரேஸ்வரர் சன்னதிக்கு இடப்பக்கத்தில் கல்யானைக்கு அருகிலேயே கோவில் கொண்டு அமர்ந்துள்ளது.

கல்லுக்கே உயிர் கொடுத்த அந்த ஈசன், கல்லாய் கனக்கும் நமது ஊழ்வினைக் கர்மங்களையும் நீக்கி அருள்புரிந்திடவே கோயில் கொண்டுள்ளான்.

ஆறுநிறைய தண்ணீர் ஓடலாம். ஓட்டைப் பாத்திரங்களால் அதை நாம் நமக்கென கொள்ள முடியாது. கொள்ளத் தெரிந்துவிட்டாலோ தாகமே நமக்குக் கிடையாது.

இந்த சுந்தரானந்த சித்தரும் அப்படித்தான். இவரின் பெருங்கருணையை, நற்பாத்திரமாக நாம் இருந்தால், வாரிக் கொண்டு வந்துவிடலாம். அசையாததை எல்லாம் அசைக்கலாம்… மன்மதன் போல எழிலுருவில் இவர் வந்ததால், மலர்கள் இவருக்கு மிகப் பிடித்ததெனக் கருதி ‘பூக்கொட்டாரம்’ போடுவது என்னும் ஒரு மலர் வழிபாடு இன்று வழக்கில் உள்ளது. குறிப்பிட்ட தொகையை ஆலய நிர்வாகமே நிர்ணயித்துள்ளது. எனவே, அணுகச் சுலபமான இந்த சித்தனை அணுகுங்கள். அப்படியே சித்தகதியை அடைய சிலராவது முயலுங்கள்.