சிவவாக்கியர் சித்தர்

சிவவாக்கியர் சித்தர் வரலாறு

இவர் சித்தர்களுள் தலை சிறந்தவர். பிறக்கும் போதே “சிவ சிவ” என்று சொல்லிக் கொண்டே பிறந்ததால் ‘சிவவாக்கியர்’ என்று பெயர் பெற்றார். இளம் வயதிலேயே ஒரு குருவை நாடி வேதங்களைப் பயின்றார். பின்பு வேற்று மொழி காரணத்தினால் வேதங்களைவிட்டு விலகினார்.

இந்நிலையில் காசியைப் பற்றி கேள்வியுற்று அதனை தரிசிக்கப் புறப்பட்டார். அக்காலத்தில் காசியில் ஒரு சித்தர் செருப்பு தைக்கும் தொழில் செய்து வாழ்ந்து வந்தார். சிவவாக்கியர் அவரைத் தரிசித்தார். சிவவாக்கியரை அந்தச் சித்தர் இனிமையாக வரவேற்றார். அவரைச் சோதிக்க எண்ணிய சித்தர் “சிவவாக்கியா செருப்புதொழில் செய்த காசு என்னிடம் உள்ளது.

இதைக் கொண்டு போய், என் தங்கையான கங்காதேவியிடம் கொடுத்து விடு அப்படியே இந்த கசப்பாக உள்ள பேய்ச் சுரைக்காயின் கசப்பையும் கழுவிக் கொண்டு வா” என்றார். சித்தர் கொடுத்த காசுகளையும் சுரைக்காயையும் எடுத்துக் கொண்டு கங்கைக்குச் சென்றார். கங்கையில் இறங்கி தண்ணீரைத் தொட்டார்.

அடுத்த நிமிடம் கங்கையிலிருந்து வளையல் அணிந்த மென்மையான கை ஒன்று வெளியில் வந்து அவரிடம் கையை நீட்டியது. சிவவாக்கியார் காசுகளை அந்தக் கையில் வைத்தார். உடனே, வளையோசையுடன் அந்தக் கை தண்ணீரிலே மறைந்தது. அதனைக் கண்ட சிவவாக்கியர் சித்தர் சிறிதும் ஆச்சரியப்படாமல், பேய்ச்சுரைக் காயை நீரில் கழுவிக் கொண்டு திரும்பி வந்து சித்தரை வணங்கினார்.

சித்தர், சிவ வாக்கியரை மீண்டும் சோதிக்க எண்ணி, “சிவவாக்கியா இதோ இந்தத் தோல் பை தண்ணீரிலும் கங்கை தோன்றுவாள். நீ அங்கே கொடுத்த காசுகளைக் கேள். அவள் கொடுப்பாள்” என்றார். அதன்படியே சிவவாக்கியரும் கேட்டார். சித்தர் செருப்பு தொழிலுக்காக வைத்திருந்த தோல் பையிலிருந்து ஒரு கை வெளியே வந்து சிவவாக்கியர் சித்தர் கைகளில் காசைக் கொடுத்து விட்டு மறைந்தது.

சிவவாக்கியர் சித்தர் அப்போதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ படவில்லை. சிவவாக்கியரின் பரிபக்குவ நிலையைக் கண்ட சித்தர், அவரை அன்போடு தழுவினார். “அப்பா! சிவவாக்கியா! முக்தி சித்திக்கும் வரை நீ இல்லறத்தில் இரு” என்று சொல்லி கொஞ்சம் மணலும், பேய்ச்சுரைக் காயையும் கொடுத்து “இவற்றை சமைத்துத் தரும் பெண்ணை மணந்துகொள்” என்று கட்டளையிட்டார்.

சிவவாக்கியர் குருவை வணங்கி, அவர் தந்த பொருட்களோடு அங்கிருந்து புறப்பட்டார். ஒருநாள் பகல் வேளையில் சிவவாக்கியர் நரிக்குறவர்கள் கூடாரம் அமைத்திருந்த பகுதி வழியாகச் சென்றார். அப்போது வெளியில் வந்த கன்னிப் பெண் ஒருத்தி சிவவாக்கியரைப் பார்த்தாள். உள்ளுணர்வு தூண்ட அவரை வணங்கி, “சுவாமி! தங்களுக்கு வேண்டியதைத் தர சித்தமாயிருக்கிறேன்” என்றாள்.

சிவவாக்கியர் சித்தர், “என்னிடம் உள்ள இம்மணலையும் பேய்ச்சுரைக் காயையும் சமைத்து எனக்கு உணவு தரமுடியுமா?” என்றார். குறப்பெண்ணும் ஒப்புக்கொண்டு அவரிடமிருந்து வாங்கி சமைக்கத் தொடங்கினாள். என்ன ஆச்சரியம்! மணல் அருமையான சாதமாகவும், பேய்ச் சுரைக்காய் கறி உணவாகவும் சமைந்தது.

சமையலை இனிதே முடித்த அவள், சிவவாக்கியருக்குப் பரிவோடு பரிமாறினாள் குருநாதர் குறிப்பிட்ட பெண் இவள் தான் என்று நினைத்த அவர் மகிழ்வோடு அவள் இட்ட உணவை உண்டார். காட்டிற்குச் சென்றிருந்த அப்பெண்ணின் உறவினர்கள் வந்தனர். அவர்கள் இவரை வணங்கி “குருசாமி! தங்களின் பாதம் பட இந்தக் குடிசை என்ன தவம் செய்ததோ?” என்று சொல்லி வணங்கி நின்றனர்.

“தவம் செய்யும் எனக்குத் துணையாக ஒரு பெண்ணைத் தேடினேன். பொறுமையில் சிறந்தவளான உங்கள் குலப்பெண்ணை என் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன்” என்றார். “சுவாமி நீங்கள் எங்களுடனே தங்குவதாயிருந்தால் எங்கள் குலப்பெண்ணைக் கொடுக்கிறோம்” என்றனர் குறவர்கள்.

சிவவாக்கியர் சம்மதித்தார். இல்லறத்தில் இருந்தாலும் தவத்தைக் கைவிடவில்லை. அதே சமயம் குறவர் குலத்தொழிலையும் கற்றுக்கொண்டார். ஒருநாள், சிவவாக்கியர் சித்தர் காட்டிற்குள் சென்று ஒரு பருத்த மூங்கிலை வெட்டினார். வெட்டப்பட்ட இடத்திலிருந்து தங்கத் துகள்கள் சிதறி ஒழுக ஆரம்பித்தது.

சிவவாக்கியர் சித்தர் திடுக்கிட்டார். சிவபெருமானே! என்ன இது நான் உன்னிடம் முக்தியை அல்லவா கேட்டுக் கொண்டிருக்கிறேன். இப்படி பொருளாசையை உண்டாக்கலாமா? செல்வம் அதிகமானால் கவலைகளும் அதிகமாகுமே என்று பயந்து ஓடிப்போய் தூரத்தில் நின்றுகொண்டு அங்கு வந்த நாங்கு பேரிடம் அதோ அந்த மூங்கிலிலிருந்து எமன் வெளி வருகிறான் என்று சொல்லி துகள்கள் உதிர்வதைச் சுட்டிக்காட்டினார்.

அந்த நாங்கு பேரும் அதைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அங்கிருந்த தங்கத்தையெல்லாம் மூட்டையாகக் கட்டிக்கொண்டு புறப்பட்டனர். ஆனால் இருட்டிவிட அங்கேயே தங்கிவிட முடிவு செய்தனர். இருவர் காவல் காக்க இருவர் அருகில் உள்ள கிராமத்திற்குச் சென்று உணவு உண்டார்கள். அதன் பின் தங்கம் நிறைய உள்ளது, நாம் இருவர் மட்டுமே அதனைப் பங்குபோட்டுக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழலாமே என்று திட்டமிட்டு மற்ற இருவருக்காக வாங்கிய உணவில் விசத்தைக் கலந்து கொண்டு கிளம்பினர்.

உணவுடன் வந்த அவர்களைப் பார்த்ததும் மூட்டைக்குக் காவலாக இருந்த இருவரும் அதோ எதிரில் இருந்த கிணற்றில் தண்ணீர் கொண்டு வாருங்கள் என்று வேண்டினர். வந்தவர்கள் இருவரும் உணவு பொட்டலங்களைக் கொடுத்து விட்டு தண்ணீர் கொண்டு வருவதற்காகச் சென்றனர். மூட்டைக்குக் காவலாக இருந்த இருவரும் அவர்களைப் பின் தொடர்ந்து சென்று அவர்கள் கிணற்றுக்கு அருகில் சென்றவுடன் காலை வாரிவிட்டு கிணற்றுக்குள் தள்ளிவிட்டுச் சென்றனர்.

“இனி இந்தத் தங்க மூட்டை நம் இருவருக்கும் தான்” என்று மகிழ்ந்து உணவு உண்டனர். உணவில் விசம் கலந்திருப்பதால் இருவரும் அங்கேயே விழுந்து மாண்டனர். மறுநாள் பொழுது விடிந்தது. வழக்கம் போல் காட்டிற்கு வந்த சிவவாக்கியர் சித்தர் நான்கு பிணங்களையும் கண்டு ஐயோ இந்த எமன் இவர்களைக் கொன்று போட்டுவிட்டதே என்று வருந்தினார்.

சிவவாக்கியர் சித்தர் கொங்கண சித்தரை சந்தித்தல்

சிவவாக்கியர் ஒருநாள் வானவீதி வழியே சென்று கொண்டிருந்த கொங்கண சித்தரைக் கண்டார். கொங்கணரும் சிவவாக்கியரைப் பார்க்க இருவரும் நட்பு கொண்டு சந்தித்து மகிழ்ந்தனர். அன்றிலிருந்து இருவரும் அடிக்கடி சந்தித்தனர். சிவவாக்கியர் சித்தர் மூங்கிலைப் பிளந்து கூடைகள் பின்னி விற்பதைக் கண்டார் கொங்கணர். இந்த மகான் தங்கம் செய்யும் வித்தை அறிந்திருந்தும் இப்படி வறுமையில் வாழ்கிறாரே என்று வருந்தினார்.

சிவவாக்கியர் இல்லாத சமயமாக பார்த்து, அவர் வீட்டிற்குச் சென்று அவர் மனைவியைச் சந்தித்து சில பழைய இரும்புத் துண்டுகளை வாங்கி அவற்றைத் தங்கமாக மாற்றிக் கொடுத்துவிட்டு சென்றார். சிவவாக்கியர் வீடு திரும்பியதும் அவர் மனைவி கொங்கணர் வந்ததையும், நடந்த விவரங்களையும் சொல்லி தங்கத்தைக் கணவர் முன் வைத்தார். சிவவாக்கியர் சித்தர் இவைகளைக் கொண்டு போய் கிணற்றில் போட்டுவிட்டு வா என்று கூற அவளும் அப்படியே செய்தாள்.

சிவவாக்கியர் சித்தர் மனைவியை அழைத்து உனக்குத் தங்கத்தின் மீது ஆசையா என்று கேட்டார். அதற்கு அவள் சுவாமி! தங்களுடைய மாறாத அன்பு இருந்தாலே போதும், எனக்குத் தங்கம் தேவையில்லை என்று கூறிவிட்டாள். சிவவாக்கியர் சித்தர் மனமகிழ்ந்து மனைவியைப் பாராட்டினார். இல்லறம் நல்லறமாக நடந்தது.

ஒரு நாள் சிவவாக்கியரை சில சிவ பக்தர்கள் சந்தித்தனர். “சுவாமி எங்களது பாவங்களை போக்கிக் கொள்ள சித்தர்களைத் தரிசனம் செய்ய வேண்டும், கொஞ்சம் ஏற்பாடு செய்யுங்கள்” என்று வேண்டினர். சிவவாக்கியர் சித்தர் சற்று யோசித்தார். “அவர்களை ஏன் தேடுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள் “சித்தர்கள் செய்யும் சித்து விளையாட்டுகள் மூலம் தங்கம் செய்து அதனால் உலகில் உள்ள வறுமையை ஒழிக்கப் போகிறோம்” என்றனர்.

அதற்குச் சிவவாக்கியர் கடகடவென சிரித்து “அன்பர்களே! உங்களின் பொருளாசையை ஒழியுங்கள் சித்தத்தை சிவனிடம் வையுங்கள். பிறகு நீங்களே தங்கமாக ஆவீர்கள். இதுதான் எல்லோரும் தங்கத்தை அடைய எளிய வழி” என்று உபதேசித்து அவர்களை அனுப்பி வைத்தார். தங்கள் தவற்றை உணர்ந்த அன்பர்கள் உண்மையை உணர்ந்து சென்றார்கள். 

இறைவா மக்களுக்குத் தூய்மையான எண்ணம் உருவாவதற்கு நீ தான் கருணை புரிய வேண்டும் என்று வேண்டினார். இவர் தன் அனுபவங்களைப் பாடல்களாக எழுதினார். இவரால் இயற்றப்பட்ட பாடல் ‘சிவவாகியம்’ என்று அழைக்கப்படுகிறது. இவருடைய பாடல்களில் சிவ என்னும் சொல்லும் அதிகமாக உள்ளது.  

சித்தர்களுள் சிறந்தவராக கருதப்படுபவர் சிவவாக்கியார். தாயுமானவர், பட்டினத்தார் ஆகியவர்களால் பாராட்டப்பட்டவர். 

போகர் தனது சப்த காண்டத்தில் சிவவாக்கியார் தை மாதத்தில் வரும் மக நட்சத்திரத்தில் பிறந்ததாகச் சொல்லியிருக்கிறார்.

நாடிப் பரீட்சை என்னும் நூலும் சிவவாக்கியாரல் எழுதப்பட்டது என்று சொல்லப் படுகிறது. சிவவாக்கியார் கும்பகோணத்தில் சமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது. இன்றும் பௌர்ணமி நாட்களில் கும்பகோணத்தில் இவருக்குச் சமாதி பூசை நடைபெற்று வருகிறது.